9.5.17

காலத்தால் அழியாத சுதந்திரம்- ஒரு இதழியல் ஆய்வு

காலத்தால் அழியாத சுதந்திரம்- ஒரு இதழியல் ஆய்வு -எல்லை. சிவக்குமாரின் புத்தகம் குறித்து எழுதும் வாய்ப்பு எனக்கு இப்பொழுதுதான் கிடைத்தது. தோழர் எல்லை. சிவக்குமாரை முதலியார்ப்பேட்டை ஜீவானந்தம் மேனிலைப்பள்ளிதான் எனக்குத் தோழர் என்ற அடையாளம் காட்டியது. என் பத்தாம் வகுப்புப் படிப்பிறுதியை ஒட்டி சென்னையில் வண்ணாரப்பேட்டை நிகழ்வுக்கு வந்த ஆசான் தோழர் ப.ஜீவா அவர்களைச் சந்தித்துப் பழகிய உணர்வை, எல்லை. சிவக்குமாருடனான தோழமை எனக்கு 1983 முதல் 2017 இன்று வரை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது.
தோழர் வ.சுப்பையா அவர்களுக்குப் புதுவை மக்கள் மேலிருந்த அக்கறையும் அன்பும் ஆர்வம் மற்றவர்களுக்கு வாய்ப்பது அரிது. சார்த்ர் சொன்னதுபோல், மக்கள் தாங்கள் பிறந்த பொழுதை அடுத்து வரும் சிறார்ப் பருவத்திலேயே சுதந்திர உணர்வை வெளிப்படுத்துவது குறித்து வ.சு. வுக்குக் கருத்து இருந்தது என்பது, வெள்ளாழ வீதி, 7ஆம் எண் இல்ல மொட்டைமாடிப் பகுதியில் அவர் என்னிடம் பேசியிருந்த பொழுதே எனக்குத் தெரியும். இளம் வயதிலேயே சுதந்திர உணர்வு வளரும் வேகத்திலேயே - பெற்றோர்களாலும் ஆதிக்கச் சமூகத்தாலும் ஒடுக்கப்படலாகிறது. வேகம் இயல்பானது. சுதந்திரத் தாகம் இயல்பானது. அது அடக்கப்படும் பொழுது தீவிரம் ஆகிறது. அதை நிதானப்படுத்தத்தான் படிப்பும் நூல் வாசிப்பும் என்று என்னிடம் சொன்னார் வ.சு. கண்டமங்கலம் வள்ளலார் மேனிலைப் பள்ளி (அப்பொழுது உயர்நிலை) 1970 தொடக்கத்தில் தோழர் வ.சு. தலைமையில் “தமிழில் முற்போக்கு இலக்கியம்” குறித்து நான் சிறப்புரையாற்றியது தொட்டு அவர் என் தந்தை பர்மா இரங்கூன் பி.கே.அண்ணாருக்கும் எனக்கும் நெருங்கிய பழக்கம். என் துணைவியார் கலாவதிக்கும் சொந்தம். தற்காலிகமாக வந்தவன், புதுவை மண்ணுடன் பிணைக்கப்பட்டதும் மண்ணின் மகளைத் திருமணம் செய்து கொண்ட வாழ்வை நிலைப்படுத்தியதும் தோழர்.வ.சுப்பையாதான். மனித வளர்ச்சிக்குரிய முதல் நிபந்தனையே சுதந்திரம் என்ற ‘விவேகம்,’ மக்கள் தலைவரும் தோழருமான வ.சுப்பையாவுக்கு மிகுந்திருந்தது. அதனால்தான் ‘சுதந்திரம்’ இதழைத் தொடங்கினார். பிரெஞ்சிந்தியப் போராட்டத்தின் வித்தும் அவர்தான். விருட்சமும் அவர்தான். புதுச்சேரியை அண்ணல் காந்திக்கும் அண்ணலுக்குப் புதுச்சேரியையும் நேரடியாக அறிமுகப்படுத்தியவர் தோழர் வ.சு.தான்.
புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தில் பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு ஆர்வம் தோய்ந்த ஈடுபாட்டை ஏற்படுத்தித் தந்தவரும் இவரே. குயிலாப்பாளையம் போன்ற தமிழக பிரெஞ்செல்லையில் வாழ்ந்தவர்களில் இன்னும் எஞ்சி வாழும் மக்கள் - வ.சு. அவர்களின் விடுதலைப் போர் உத்திகளையும் தலைமறைவு வாழ்க்கையின் அதிசயங்களையும் இன்றும் என்னிடம் சொல்லி வருகின்றனர். இடையார்பாளையம் ஆலைக்காரத் தோழர் இராமு அவர்களுள் ஒருவர்.
தன்னுடைய இருபத்து மூன்றாவது அகவையில் இந்தச் ‘சுதந்திரம்’ என்னும் ஆலமரத்துக்கு வித்திட்டவர் மக்கள் தலைவர் வ.சு. தன்னொத்த புதுவை மக்களின் அடிமை வாழ்க்கையை வெறுத்த சுதந்திரத்தாகமே அவரை 1929ம் ஆண்டு முதல் பற்பல சமூக இயக்கங்களை தோழமை இயக்கங்களை இயக்க உந்திற்று. அவற்றை நூலில் பரக்கக் காணலாம். வாய்ப்பேச்சால் மக்களை ஒருங்கிணைத்ததன் மாற்று வடிவப்பதிவாக இதழ் தேவைப்பட்ட பொழுதுதான் ‘சுதந்திரம்’ மாத இதழ் உருவானது. 1934ம் ஆண்டில் வெளிவந்த இத்தகைய ‘சுதந்திரம்’ மூன்று இதழ்களைத்தான் நம் தோழர் எல்லை சிவக்குமார் எடுத்துக் கொண்டு இந்த ஆய்வுக் கைநூலை உருவாக்கியுள்ளார். ‘சுதந்திரம்’ -- விரிவான ஆராய்ச்சி செய்ய இனிவரும் காலங்களில் முற்படும் தோழர்களுக்கு இந்நூலே கைநூலாகவும் ஆய்வுத் தடத்தின் ஆரம்பச் சுவடாகவும் புலப்படும்.
அரும் முயற்சியில் இந்த ஆய்வு உருவாக்கப்பட்டது என்ற ஒற்றை வரியில் தோழர் எல்லை.சிவக்குமாரைக் சுருக்கிவிட நான் விரும்பவில்லை.
தன்னையே இளைஞன் வ.சு.வாக வைத்து உணர்ந்து வ.சு.வாகி சுதந்திரம் (1934+) தொடங்கி அவ்வாண்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பறிமுதலுக்கு உட்படாத ஜூன் செப்டம்பர் நவம்பர் ஆகிய மூன்றிதழ்களைப் பற்றிக் கொண்டு அவற்றைக் கருவூலமாக்கி ஆய்வு தொடங்குகிறார் தோழர். (1934 ஜூலை, ஆகஸ்ட் சுதந்திரம் ஏடுகள் பிரிட்டிஷ் அரசினால் பறிமுதல் செய்யப்பட்டவை).
இந்த இதழ்களில் மகாகவி பாரதியின் படைப்புகள், யோகி சுத்தானந்த பாரதியின் படைப்புகள் - தொடர்ந்து வெளியாக்கப் பெற்றன. தவிர, பரலி சு.நெல்லையப்பர், சங்கு சுப்பிரமணியன், டி.எஸ். அவினாசிலிங்க செட்டியார் முதலானவர்களின் சீரிய கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.
1935லிருந்து வார இதழாக ‘சுதந்திரம்’ வரத் தலைப்பட்டது. பிரான்சு கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையேடான ‘ஹுமானித்தே’ இதழில் வெளிவந்த மார்க்சியக் கட்டுரைகளும் தொடக்கத்திலேயே ‘சுதந்திர’த்தில் வெளியாயின. தமிழில் முதல் பொதுவுடைமை இதழ் ‘சுதந்திரம்’ தான் என்கிற ஆய்வை முனைவர் ‘மலையருவி’ நா.இளங்கோ வெளிப்படுத்தியுள்ளார்.
தோழர் அமீர் ஹைதர்கான் என்ற உலகப் புரட்சியாளர்களுடன் நேரடிப் பழக்கம் கொண்ட, உலகக் கம்யூனிஸ்ட் கொள்கையாளர்களுடன் கருத்தாடல் ஏற்ற, விளைவாக ‘மூன்றாவது அகிலத்தின்’ செயற்பாட்டாளராக வி.இ.லெனின் அவர்களால் ஆக்கப்பட்ட அமீர் ஹைதர்கான், ‘சங்கர்’ என்ற புனைபெயருடன் செயல்படத் தீர்மானித்த சில நாள்களில் தோழர் வ.சுப்பையாவைச் சந்தித்து, புதுவையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை அவருடன், அதாவது தோழர் வ.சு.வின் ஒப்பரிய ஒத்துழைப்பால் தொடங்குகிறார். இன்னும் துல்லியமாகச் சொன்னால் சங்கர் (எ) அமீர் ஹைதர்கான் சென்னையிலிருந்து புதுவைக்கு வந்தபொழுது, 1911ஆம் ஆண்டு தோன்றி, கலவைக் கல்லூரியில் படிக்கும் பதின்பருவத்திலேயே 17ஆம் வயதிலேயே சுதந்திரத்துக்காக - மாணவர் உரிமைக்காகப் போராடத் தொடங்கிவிட்ட தோழர் வ.சுப்பையாவைச் சந்தித்து இலக்கில் தடம் பதிக்கத் துணைநிற்கிறார்.
‘தி ஸ்டார் இந்தியா இன்சூரன்சு நிறுவனத்தின்’ பணியினால் கிடைத்த தொகையின் பகுதியைக் கொண்டே ‘சுதந்திரத்தை’ தொடங்கினார் தோழர் வ.சு. 1934ஆமாண்டில் மாத இதழாக வெளிவரத் தொடங்கிய பொழுது ‘சுதந்திரம்’ ஏட்டின் பதிப்பாக, அச்சீட்டாளராக, ஆசிரியராக இருந்த தோழர்.வ.சு., புதுச்சேரி கலாநிதி அச்சகத்தில் இதழை அச்சியற்றியுள்ளார்.
சுதந்திரத் தாயின் உருவகப் படத்துடன் முதலிதழ் தொடங்கியிருந்துள்ளது. மாலை:1 மலர்:1 என்ற எண்ணீடு எத்துணை ஆழமானது.. மாலை என்பது அடிமைக்கானதல்லவே.. பொதுவாக ‘volume’ ‘issue’ என்ற எண்குறியீட்டை இலக்கு விளக்கமாக நிர்ணயிக்கும் முறையிலேயே இதழின் ஆசிரியர் என்ன உட்கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து விடலாம் என்பது இதழியல் நூற்பா எண்#1. முதலிதழின் இரண்டாம் பக்கம் சுதந்திரத் தாயின் விளக்கத்தில் “சுதந்திர லட்சியத்தை உலகுக்கே போதித்த பிரான்சின் குடியாட்சியில் இருக்கும் புதுவையிலிருந்து இன்று வெளியில் வருகிறாள்’ என்ற பகுதி குறிப்பிடத்தக்கது. 1985இல் வெளிவந்த ‘சுதந்திரம் பொன்விழா மலரில் பாரத அன்னையின் இலட்சியப் பயணம் என்ற பகுதியில் 1934 ஜூன் வெளியான சுதந்திரத்தின் முகப்பட்டைச் சித்திரம் உரிய முறையில் விளக்கப்பட்டுள்ளதைப் படித்துப் பாருங்கள். சுதந்திரத்தின் ஒவ்வோரிதழிலும் பாரதியின் “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம், எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு!” என்ற வரிகள் ‘சுதந்திரத்தின் பிரகடனமாக வெளிவந்துள்ளன. ‘அரசியல் விடுதலைக்கு முந்தியது சமூக விடுதலை’ என்ற கருத்தை முன்வைத்த வ.சு.வின் (சுதந்திரம் தொடக்கக் கட்டுரை) ஆவணக் கட்டுரையில், சமூகத்தின் அத்தனைச் சீர்கேடுகளும் விரிவாக அலசப் பெற்று, அவற்றிலிருந்து மீண்டுதான் அரசியல் விடுதலை பெறவேண்டும் என்ற முடிவும் முன்வைக்கப்பெற்றது. சரி. 1930களின் தொடக்கத்தில் புதுச்சேரியில் பரவலாக விளங்கிய மொழிமதிப்புள்ள பிரெஞ்சிலோ, பாரதியே மதித்தெழுதிய ஆங்கிலத்திலோ தானே ‘சுதந்திரத்தை’ வெளியிடவேண்டும். 1967க்குப் பிறகு தானே பொதுவாக, எல்லோருக்கும் புரியும் தமிழிலும், மறைமலையடிகளார் தொடங்கிவைத்த தனித்தமிழிலும் எழுதுவதும் நாகரிகமானது? மறுமொழியாக முன்னறிந்து தொலைநோக்குடன் தோழர்.வ.சு., 1934லேயே இதழின் மொழிநோக்கை எழுதுகிறார்.
“சுதந்திர உணர்ச்சியையூட்டுவதற்குத் தாய்மொழி வாயிலே தகுந்த முறையாம். ஆதலால் தமிழ் மொழியைப் பேண வேண்டும். அதனால் தமிழன் உள்ளம் பெருகும். தமிழன் அறிவு வளரும். அதற்காக புதைந்து கிடக்கும் நமது பழங்கலைகளைத் தோண்டியெடுத்து அவற்றை இக்காலத்திற்கேற்ற முறையில் திருத்தியமைத்துப் போற்றி வளர்த்தல் வேண்டும். எனவே நமது சுதந்திர லட்சியங்களை மக்களிடையே பரப்புவதற்கான சகல துறைகளிலும் அச்சமின்றி ஈடுபட்டு தொண்டாற்ற வேண்டுமென்ற வீர தாக்கத்துடன் பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.”
சுத்தானந்த பாரதி கவிதை, சங்கு சுப்ரமணியத்தின் ‘கழுகுக் கட்டுரை’, சமுத்ர நாராயணன் கவிதை, “தொழிலாளர்களின் திண்டாட்டமும், முதலாளிகளின் கொண்டாட்டமும்” என்ற தோழர் வ.சு வின் மிக முக்கியமான மார்க்சியக் கட்டுரை, சாரணர் இயக்கம் பற்றிய இ.கிருஷ்ணசாமி கட்டுரை, ‘மோலியார் வரலாறு’ (கவியோகி கட்டுரை), இன்னும் பல. நான்காம் ‘சுதந்திரம்’ பாரதி உருவத்துடன் வெளிவந்த சேதியும் விரிவான தரவுகளும்; நேருவின் உருவத்துடன் வெளிவந்த நவம்பர் மாத இதழின் தரவுகள்..- குறிப்பாக கட்டுரைப் போட்டியில் பரிசுபெற்ற ‘இந்தியப் பொருளாதார நெருக்கடியின் காரணமும், அதை நிவர்த்திக்கும் வழியும்’ என்ற தலைப்பில் ஆன சென்னைத் தோழர் நா.ராஜன் கட்டுரை குறித்த தரவும் இடம் பெற்றுள்ளது. ரூ.25/- (இருபத்தைந்துரூபா) என்ற அக்காலத்துப் பணமதிப்பிலுயர்ந்த சிறுகதைப் போட்டிப் பரிசும் இந்நூல் காட்டும் தரவுகளுள் முக்கியமானது.
தாகூர் கல்லூரியானது, முன்பு இயங்கிய நகரப் பள்ளியாகிய கலவைக் கல்லூரியில் வகுப்பு நடத்தும் மொழிமுறையில் மாற்றம் வந்தபொழுது தி.அ.ரா. என்பவர், ‘தமிழும் கல்வே காலேஷூம்’ என்ற கட்டுரைவழி பெற்றோருக்குத் தாய்மொழிக் கல்வியைப் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டிய கடமையினை அருமையாக வலியுறுத்தியுள்ளார். எண்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தான் எழுதப்பட்ட காலகட்டத்தை விட மிகவும் பொருந்தக்கூடிய கட்டுரை அது. தி.அ.ரா. என்ற இத்தகைய சிந்தனையாளர் – தொலைநோக்காளர், நமக்கு முன்னர் வாழ்ந்ததை, சிந்தித்ததை, எழுதியதை வெளிப்படுத்தியவர் தோழர்.வ.சு. இதழ் ‘சுதந்திரம்’ நவம்பர் 34 இதழில் 5 சிறந்த சிறுகதைகளும் 4அறிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளமையை மட்டும் குறிப்பிடாமல் அந்த ஒன்பதும், தேசிய உணர்வையும் விடுதலை உணர்வையும் ஊக்குவிக்கும் வகையில் விளங்குவதைத் தோழர் எல்லை. சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஆய்வானாலும் அதன் பிழிவான, அந்த ஆய்வின் முறையியலால் பெறப்பெற்ற ‘findings’ என்று சொல்லப்படும் முடிபுகள் முத்தாய்ப்பாய் நிறுவப் பெறல் முக்கியமாகும். அதை தோழர் எல்லை. சிவகுமார் சிறப்பாகச் செய்துள்ளார்.
அவையாவன:
1. உழைக்கும் வர்க்கத்துக்கு உற்ற கருத்துத் தோழனாய் புதுச்சேரி மண்ணில் பூத்தது ‘சுதந்திரம்’.
2. 1934இல் வெளியான ‘சுதந்திரம்’ மாத இதழின் நோக்கம் “சமூக சுதந்திரத்திற்கு உழைப்பதே”.
3. தோழர் வ.சுப்பையாவின் சிந்தனையின் செயல் வடிவமே ‘சுதந்திரம்’.
4. “சென்னை சர்க்கார் அச்சுச் சட்டம் என்ற பாணத்தை”, தோன்றி ஐந்து மாதமே ஆன ‘சுதந்திரத்தின்மேல்’ தொடுத்தார்கள். அடக்குமுறைச் சட்டங்களைத் தாண்டி “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே! என்று வீர நடை போட்டது ‘சுதந்திரம்’.
5. மார்க்ஸ் ஏங்கல்ஸால் உருவாக்கப்பெற்ற கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை (MANIFESTO OF THE COMMUNIST PARTY BY K.MARX AND F.ENGELS 1872) (ஜெர்மன் பதிப்பு 1872 தான் முதலாவது; ரஷ்யன் 1882; ஆங்கிலம் 1888) உலகில் நூறு மொழிகளுக்கு மேல் மொழியாக்கம் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் மொழியாக்கப்பட்ட வர்க்கப் போராட்டம் நடைபெறும் அரசியல், பொருளியல், சித்தாந்தம் ஆகிய முத்தளங்களையும் 1934 ஜுன் மாதம் வெளிவந்த மாத இதழும்; 1935 லிருந்து வந்த வார இதழுமான ‘சுதந்திரம்’ தன் தத்துவ மரபாக மார்க்சீயப் பார்வையில் வந்த தமிழ் முதலிதழ் ஆகும். (C.S.சுப்ரமணியம் / ப.126).
6. மேற்சொன்ன அரசியல், பொருளியல், தத்துவம் என்ற முத்தளங்களிலும் தன் உருவத்தாலும் உள்ளடக்கத்தாலும் வீறுநடை போட்டு, தனக்கு உண்டாக்கப்பட்ட தீய-மாபெரும் இடர்களைத் தாண்டி இன்றும் தன் 84ஆம் ஆண்டில் இடைவிடாது வெளிவந்து கொண்டிருக்கிறது. “நெருப்பில் துளிர்த்தெழும் ‘பீனிக்ஸ்’ பறவையை வென்றவரும் இல்லை; அதனை எதிர்த்து அதனருகே நின்றவரும் இல்லை” என்ற உண்மை ‘சுதந்திரத்துக்கு 100% பொருந்தும்.

-தோழர் தேவமைந்தன்
(அ.பசுபதி)
முகநூல்: புதுவை பசுபதி தேவமைந்தன்
ட்விட்டர்: @PasupathyAnnan

Google+ : kruppannan.pasupathy@gmail.com

22.2.17

தமிழகத்திலும் யாழ்ப்பாணத்திலும் சாதிக்கட்டமைப்பின் அடித்தள வேறுபாடு

"தமிழகத்துச் சமுதாயக் கூட்டமைப்புப் பெரும்பாலும் கணங்களே(குலக்குழுக்கள்) சாதிகளாக அமைந்துள்ளதால் நாங்கள் -- நாம் என்ற பன்மை வேறுபாடு அப்பேச்சு வழக்கிலே தொடர்ந்து நிலவுவது, சமூக மானுடவியலாளனுக்கு ஆச்சரியத்தைத் தராது. கணநிலையில் வாழ்வோரிடத்து இவ்வேறுபாடு வினைச்சொற்களிலும் காணப்படுகிறது என்பதற்குத் தொதுவர் மொழி உதாரணமாகும். யாழ்ப்பாணத்திலே இது காணப்படாததற்கு அங்கு சாதி அமைப்பு குலக்குழு, கண அமைப்பிலல்லாது தொழிலடிப்படையிலேயே அமைந்திருத்தல் காரணமாகலாம். இலங்கைத் தமிழ் வழக்கிலும் மட்டக்களப்பில் இது நிலவிற்று என்பதற்குச் சான்றாகலாம். இந்த நாம், நாங்கள் வேறுபாடு ஆப்பிரிக்க மொழிகள் பலவற்றிலும் காணப்படுகின்றதென யெஸ்பர்ஸன் கூறுவார். அங்குக் குலக்குழு நிலைமை பேணப்பட்டமையை அவதானிக்கும்பொழுது, இதுவரை கூறப்பட்டதன் உண்மை விளங்கும்."
-- கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி

3.9.16

முகநூலில் பதிவனவற்றை அச்சுநூல்கள் ஆக்கிவரும் நண்பர் இரா. நாறும்பூநாதன்

முகநூல்/முகப்புத்தகம்/Facebook -இல் நீடிப்பதோ, உட்புகுவதோ வீண் என்னும் நண்பர் கவனத்துக்கு இச்சேதியைக் கொண்டு வந்துள்ளேன். இரா. நாறும்பூநாதன் என்னும் முகநூல் நண்பர், (முகப்புத்தகம் என்று முகநூலை முதலிலிருந்தே சொல்லிவருபவர்) - தான் முகநூலில் பதிவனவற்றைப் புத்தகங்களாக்கி வருபவர். விற்பனையும் குறைவில்லாமல் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். சான்றாக, இந்த நூல். இதன் அட்டைப்படமும் ஓர் அழிவிலாக் கோயிற்படம்தான். கழுகுமலைக் கோயில். ஓவியர் ஈசுவரமூர்த்தியால் வரையப்பெற்றது. டெம்மி அரைக்கால் அளவுள்ள பக்கங்கள் 286 கொண்டது. இந்தப் புத்தகத்தை அவர் கி.ரா. ஐயாவுக்கு அனுப்ப, அவர் தம் வழமைப்படி,குங்குமச் சிவப்பு நிறமெழுதும் தூவலால் குறித்து வாசித்தபின், முனைவர் சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகருக்குக் கொடுக்க, அவர் தன் வழமைப்படி(நாயகர், எந்தப் புத்தகமானாலும் எங்களைப் போல் அடிக்கோடுகளோ குறியீடுகளோ பதிக்காமல், தூய்மையாகப் படித்துத் தருவார்)வாசித்துமுடித்து எனக்குத் தந்தார். தான் வாங்கும் எண்ணற்ற நூல்களில், தன் பெயரையும் எழுதி உடைமையாக்கிக்கொள்ள மாட்டார் அருள் (எ) நாயகர். மாறுபட்ட மனமுடையவர்களின் உலகத்தில் வேறுபட்டுத் தன்னியல்பாக வாழ்பவர்களோடு பழகுமாறு விதிக்கப்பெற்றுள்ளவன் அடியேன்.இவ்வாறு, மூன்றாவது கையாக, இந்த நூல் என்னை வந்தடைந்தது. எனக்குக் கிடைக்கும் நூல்கள் பல, இத்திறத்தனதாம். இது எனக்கும் ஆகவும் உடன்பாடே. நண்பர்களுடன் பகிர்ந்து வாசிப்பதே மனநிறைவுதான். தன்னந்தனியாக, ஒருமுறையும் புரட்டிவாசிக்கப்பெறாத புத்தம் புதிய புத்தகங்கள், அடங்காக்குமைச்சலுடன் நிலைப்பேழைக்குள் ஒடுங்கிக் கிடக்கும் நூலகமெல்லாம் நூலகமா? - தேவமைந்தன்


14.5.16

வியத்தலும் இலமே

"தங்களுக்கு இயல்பாகவும், பயிற்சி + முயற்சிகள் மூலமும் வாய்த்துள்ள தகுதியால் 'பெரியவர்கள் ஆனவர்களை' வியந்து பொறாமைப்படவோ, போற்றவோ நாங்கள் செய்வதில்லையே. அவ்வாறு, இயற்கையாகவே நல் வாய்ப்பைப் பெறாதவர்களாகப் பிறந்து வாழ நேர்வதால் ~~இயல்பை மீறி தங்களுக்கு அமைத்துக் கொண்ட வாய்ப்புக்களால் 'வென்றவர்கள்' வல்லாண்மை செய்யும் இந்தச் சமூகத்தால், 'சிறியவர்கள்' என்று முத்திரை குத்தப்படுபவர்களை இகழ்வது என்பதைச் செய்ய நினைக்கக் கூட மாட்டோம் :)"

- சங்ககாலப் பாவலர் கணியன் பூங்குன்றனார்

18.4.16

Thanks to BBC Tamil


tag:www.bbctamil.com,2016-02-21:/tamil/sri_lanka/2016/02/160221_elathupadal5
/tamil/sri_lanka/2016/02/160221_elathupadal5
2016-02-21T15:56:59+00:00
2016-02-21T15:31:51+00:00


ஈழத்துப்பாடல்கள் பகுதி 5
இலங்கையின் பாடல்கள், இசைவடிவங்கள் குறித்து ஆராயும் எமது ஈழத்துப்பாடல்கள் என்னும் இந்த தொடரின் ஐந்தாவது பகுதியில் தாலாட்டு மற்றும் ஒப்பாரி பாடல்கள் குறித்து ஆராய்கிறோம்.



ஈழத்துப்பாடல்கள் பகுதி 5





tag:www.bbctamil.com,2016-02-13:/tamil/sri_lanka/2016/02/160213_eelaththu4
/tamil/sri_lanka/2016/02/160213_eelaththu4
2016-02-14T16:55:52+00:00
2016-02-13T14:26:14+00:00


ஈழத்துப்பாடல்கள் - பகுதி 4
இலங்கையின் இசை வடிவங்கள் குறித்து ஆராயும் ஈழத்துப்பாடல்கள் என்னும் இந்த தொடரின் இந்த நான்காவது பகுதியில் இலங்கையின் நாட்டார் பாடல்கள் குறித்த சில கருத்துக்களை கேட்கலாம்.



ஈழத்துப்பாடல்கள் பகுதி 4





tag:www.bbctamil.com,2016-02-07:/tamil/sri_lanka/2016/02/160207_eelaththupadal3
/tamil/sri_lanka/2016/02/160207_eelaththupadal3
2016-02-07T16:23:52+00:00
2016-02-07T15:31:43+00:00


ஈழத்துப்பாடல்கள் பகுதி - 3
ஈழத்துப்பாடல்கள் என்னும் தலைப்பிலான எமது இலங்கையின் பாடல்கள் குறித்த இந்தத்தொடரின் இந்த மூன்றாம் பகுதியில் அங்கு புழக்கத்தில் இருக்கும் நாட்டுக்கூத்துப் பாடல்கள் குறித்து பார்க்கலாம்.



ஈழத்துப்பாடல்கள் பகுதி 3





tag:www.bbctamil.com,2016-01-31:/tamil/arts_and_culture/2016/01/160131_eelaththupadal2
/tamil/arts_and_culture/2016/01/160131_eelaththupadal2
2016-01-31T15:41:44+00:00
2016-01-31T15:39:24+00:00


ஈழத்துப்பாடல்கள் பகுதி இரண்டு
இலங்கையின் பாடல்கள் குறித்த இந்த தொடரின் இந்த பகுதியில் அங்குள்ள சடங்குப்பாடல்கள் குறித்து பேசப்படுகின்றது.



ஈழத்துப்பாடல்கள் பகுதி இரண்டு





tag:www.bbctamil.com,2016-01-24:/tamil/sri_lanka/2016/01/160124_eelaththupadal1
/tamil/sri_lanka/2016/01/160124_eelaththupadal1
2016-01-24T13:28:12+00:00
2016-01-24T12:46:06+00:00


ஈழத்துப் பாடல்கள் - பகுதி ஒன்று
இலங்கை தமிழர்களின் பாடல்கள் மற்றும் இசை வடிவங்கள் குறித்த தொடரின் முதல் பகுதி.



ஈழத்துப் பாடல்கள் - பகுதி ஒன்று





உருப்பட மாட்டாயடா தமிழா! - ம. இலெ. தங்கப்பா

உருப்பட மாட்டாயடா, தமிழா!
உருப்பட மாட்டாயடா!குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சி நடத்திடும்
கொள்கையும் உணர்வும் உனக்கு வருமட்டும்
( உருப்பட......)ஐந்து மணிஎன அழைப்பில் முழங்குவாய்;
ஆறரைக் கேஅந்தக் கூட்டம் தொடங்குவாய்!
நந்தம் தமிழர் பழக்கம் இது என்பாய்;
நாணமில் இந்நிலை ஒழிந்திடு மட்டும் நீ
(உருப்பட......)ஆள்சேர வில்லை என்று அரைமணி நீட்டுவாய்;
அரிய தலைவர்தாம் வராமையைக் காட்டுவாய்;
நீள்உரை ஆற்றுவோர் மேல் குற்றம் சாட்டுவாய்;
நித்தமும் இப்படிப் பொழுதெல்லாம் ஓட்டுவாய்; (உருப்பட......)இரண்டே நொடியில் முடிப்பதாய்ச் சொல்லுவாய்;
இருபது மணித்துளி வெறும்வாயை மெல்லுவாய்;
திரண்டுள மக்களின் உணர்வையும் கொல்லுவாய்;
செயல்திறம் இன்றி நீ எப்படி வெல்லுவாய்?
(உருப்பட......)முன்னிலை யாளர்கள் பன்னி உரைப்பதும்,
மூத்தவர் வாழ்த்துரை சொல்லிக் கழிப்பதும்,
பின் உரையாளர் சொல் வானைக் கிழிப்பதும்,
பேச்சுப் பேச்சே, வெறும் பேச்சுன்னை அழிப்பதும். (உருப்பட......)உரிய பொழுது ஒன்றைத் தொடங்கி முடிக்கிலாய்;
ஒவ்வொரு பேச்சுக்கும் நேரம் வகுக்கிலாய்;
இருபது பேர்களைப்** பேச அழைக்கிறாய்;
ஏழில் தொடங்கி நள்ளிரவில் முடிக்கிறாய்.
- தங்கப்பா 01.08.1999.
**1999 என்பதால் 20 பேர் என்றார் தங்கப்பா. இப்பொழுதெல்லாம் 2 அல்லது 3 மடங்கு 20 பேர் அழைப்பில் 'போடப்' படுகிறார்கள். இந்தப் பாட்டைவிட அழுத்தமானது - (மதனபாண்டியன் இலெனின்) தங்கப்பா படைத்த 'மன்னூர் மாநாடு.' 'வேப்பங்கனிகள்' தொகுதியும் அத்தகையதே. ~ அ. பசுபதி.

ஆன்றி த்ரோயா பிரெஞ்சில் எழுதிய ‘கைகள்’ [சிறுகதை] ~ தமிழில்: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்

ஆன்றி த்ரோயா பிரெஞ்சில் எழுதிய ‘கைகள்’ [சிறுகதை] ~ தமிழில்: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர். (இக்கதை இடம் பெற்ற தொகுப்பு நூல்: “கடவுள் கற்ற பாடம்’ நற்றிணை பதிப்பகம், சென்னை - 5. ஆகஸ்ட் 2015)
உலகின் அழகான சாலைகள் சந்திக்கும் ஷான்லிசே சதுக்கம் அமைந்திருந்த- கிங் ஜார்ஜ் சிகை அலங்கார நிலையத்தில், இருபத்து மூன்று வயதில், கைகளைப் பராமரித்து அழகு சேர்க்கும் பணியில் ழினேத் சேர்ந்தது, இப்பணி மீது அவளுக்கிருந்த நாட்டத்தினால் அல்ல. ஆண்கள் மட்டுமே வாடிக்கையாளர்களாக வரும் இந்த இடத்தில்,அவளுக்கான கணவரைக் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கைதான் முக்கிய காரணம். பத்தொன்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. இதுவரை இவளிடம் கைகளைக் காட்டிய எந்த ஆண்மகனும், இவளது கைகளைக் கேட்டபாடில்லை` ~ என்று நண்பர் நாயகர் நடையில் சுவாரசியமாகத் தொடங்கும், ஆன்றி த்ரோயா’வின் ‘கைகள்’ கதையின் போக்கு அட்டகாசமானது. பிரான்சில் சொந்தக்காலில் நிற்கும் ஓர் இளம்பெண் முதிர்கன்னியாகும் வரை, அவளைக் கல்யாணம் செய்து கொள்ளக் கைகளை நீட்டும் ஆண்தகைமை[பெளருஷம்], அவளிடம் பதினேழாண்டுகளாக ‘விரல்பராமரிப்பு’க்காகக் கையை நீட்டும் எவனுக்கும் வாய்க்கவில்லை என்பதை நுண்ணுணர்வை இரசிக்கும் வாசகர் எவரானாலும் - ஆணானாலும், பெண்ணானாலும், உணர்ந்து வருந்தவே செய்வர். பிரெஞ்சிளைஞர் பார்வையில்தான் ஏதோ குறை என்று நாம் நினைக்கும்போது, ஆன்றி த்ரோயா சொல்கிறார்: “... இவளது உடற்கட்டில் ஆண்களின் உணர்வைப் பற்றவைத்துக் குடும்பம் நடத்தத் தூண்டும் ஏதோ ஒன்று குறைகிறது என்பது மட்டும் உண்மை.” (கடவுள் கற்ற பாடம், பக்கம் 25)
உயரமானவள். வெள்ளை. ஆட்டுக்குட்டியை நினைவூட்டும், அவள் கண்களின் இடைவெளி. மென்மையான பார்வை. அசைவுகளில் சஞ்சலம் கொண்டவள். மற்ற பெண்களுக்கு வெட்கம் வராத சூழலுக்குக்கூட நாணமடையும் இயல்பு உடையவள். வேலை இடைவேளையில், உடன்பணியாற்றும் இளந்தோழிகளின் அரட்டையில் கலந்துகொள்ள மாட்டாள். ஒப்பனை: வானத்துக்கு மேகம்போலக் கொஞ்சம் ‘மேக்கப் பவுடர்’ ஒப்பனை; செவிமடல்களின் பின்பக்கம் இரண்டு சொட்டு ‘பெர்ஃபியூம்.’ அவ்வளவுதான்.
நாற்பது வயது வரை தனது கன்னிமையைத் துன்பமெனக் கருதியவள், இப்பொழுது அதைத் ‘தனிமை’ என்று அடையாளப்படுத்த விழைகிறாள். நகங்களைச் சீர்படுத்துவதில் ழினேத்தை விஞ்ச எவருமில்லை. ‘கிங் ஜார்ஜ் சிகை அலங்கார நிலைய’த்தின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள், அவள் ‘அப்பாய்ன்ட்மென்ட்’ கிடைப்பதற்கு ஒருநாள் தள்ளிப் போனாலும் கவலைப்பட மாட்டார்கள்.
தன்னுடன் வேலைசெய்பவர்கள் பலர் இந்தத் தொழிலை ‘போரடிக்கும் எந்திரமயமானது’ என்று நினைத்திருந்தனர். ழினேத்துக்கோ, அதில் ஒருவிதமான கவித்துவமும் சுவாரசியமும் அடங்கியிருக்கின்றன என்பது கருத்து. கீழ்த்தளத்தில் வாய்மூடித் தன் பணியே கவனமாக இவள் இருக்கையில் மேல்தளத்தில், இவளும் அணியும், கம்பெனியின் முதலெழுத்துகள் பொறித்த வெள்ளைநிறச் சீருடை அணிந்த ‘முடிவெட்டுபவள்’ வாடிக்கையாளருடன் அடிக்கும் அரட்டையும் அதன் விளைவாக விளையும் வெடிச்சிரிப்புகளும், தெளிவாகப் புரிகிறதோ இல்லையோ, இவள் கன்னங்களில் சிவப்பை அப்பும். ழினேத்துடன் பணிபுரியும் பெண்கள் தம் உடம்பை ஓரளவேனும் வெளிக்காட்ட முயலும் நிலையில், இவள் ‘கவரிங் புரூச்சுகளை’ப் போட்டு அந்த இடங்களை மறைத்துக் கொள்வாள். கொஞ்சம் தாரளமாக இந்த விஷயத்தில் அவள் இருந்திருந்தால், இந்நேரம் அவளுக்குக் கணவன் அமைந்திருக்கலாம், “இயல்பை வலிந்து சென்று மாற்றுவதால் எவ்விதப் பலனும் இல்லை ~~ என்று எண்ணி, அத்தகைய எண்ணம் வரும்போதெல்லாம் அமைதி அடைந்து கொள்வாள் ழினேத்.
ஆண்கள் அருகிலிருந்து பணிசெய்வதில் கிடைக்கும் ‘இத்தகைய பிரச்சினை எதுவுமற்ற பரவசம்’ மூலம் ழினேத் எதையும் குறிப்பாக எதிர்நோக்குவதில்லை. ஆனாலும் நாள்தோறும் இயல்பாக அவளுக்கு அமையும் இச்சூழல், போதைப்பொருளைப் போல அவசியமாகிவிட்டது. [இந்தச் சூழல் விவரம் கதையில்] வேலை முடிந்து இரவில், குவியோன்சேன்சீரிலுள்ள தன் அறைக்குத் திரும்பும்போது, மிகவும் சோர்வாக இருப்பாள். ஆண்களின் பலவிதமான கைகள் ~ மென்மையாகவும் ஈரமாகவும், வறண்டும் எலும்பாகவும், மேற்புறம் முடியடர்ந்திருப்பவை என்று ~ அவள் மனத்திரையில் வந்துபோகும். மணிக்கட்டிலிருந்து பிரிந்து காற்றில் மிதக்கும் கைகளில் சில, கனவுகளிலும் பின்தொடரும். ஆனாலும் அடுத்தநாள் காலை கண்விழித்து எழும்போது, எப்பொழுதும்போலவே, தெளிவான மனத்துடன் இருப்பாள்.
ஒரு மே மாத சனிக்கிழமை. ஒரு நக அலங்கார வேலையை முடித்துவிட்டு, அடுத்த வாடிக்கையாளர் வரும்வரை கிடைக்கும் தற்காலிக இடைவெளியின்பொழுது, ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள் ழினேத். அப்பொழுது, கடைக்கு உள்ளே ஒரு குள்ளமான நபர் வந்தார். சாம்பல்நிற முடியும் வெளிறிய வட்டமான முகமும் கொண்டவராக இருந்தார். அவரது வயிற்றுப் பகுதியில் மேடாக இருந்தது. அவர் அணிந்திருந்த கறுப்புநிறக் கோட், விறைப்பான காலர், அவரது சிவப்பு ‘டை’யில் காணப்பட்ட முத்து எல்லாம் சேர்ந்து...... உறுதியாக இவர் ஒரு பெரிய ஆபீசராகத்தான் இருக்க வேண்டும் என்ற கணிப்புக்கு வந்தாள் ழினேத். ‘கிங் ஜார்ஜ் சிகை அலங்காரக் கடை’க்கு அவர் வருவது இதுதான் முதல் முறை என்பது மட்டும் அவளுக்கு நிச்சயமாகத் தெரியும்.
[விதி நல்லபடி ஆகும். அதைத்தானே திருவள்ளுவர் ‘ஆகூழ்’ என்று கூறுகிறார். தன் 23 வயது முதல் 40 வயது வரை, மற்ற தன்னொத்த வேலை செய்யும் பெண்கள் போலல்லாமல் கன்னிமையை பேச்சிலும் கூடக் காத்துவந்த ழினேத்தின் வாழ்க்கையை அடியோடு மாற்றப் போகிறவர் அந்த நபர் என்பது ழினேத்துக்கு அந்த தருணத்தில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அல்லவா? நமக்கும் கதையை முழுதாகப் படிக்கும்வரை தெரிய வேண்டாம்;-) ]